×

திருச்சி அருகே ஒரு வேடந்தாங்கல்: ஆயிரக்கணக்கில் குவிந்துள்ள வெளிநாட்டு பறவைகள்

திருச்சி: பறவைகள் தங்களின் உணவுக்காகவும், கடுங்குளிரிலிருந்து தப்பிக்கவும் ஆண்டுதோறும் பூமியின் ஒரு பகுதியில் இருந்து மற்றொரு பகுதிக்கு இடம்பெயர்தலை வலசைபோதல் என்பர். இனப்பெருக்கம், உணவுத்தேடல் ஆகியவற்றுக்காக ஏதுவான சூழலை தேடியும் தங்களது வசிப்பிடங்களில் குளிர்காலம் தொடங்கும்போது கடுங்குளிரிலிருந்து தப்ப வெப்பமான இடங்களை நோக்கி ஆண்டுதோறும் குறிப்பிட்ட காலத்தில் பறவைகள் இடம் பெயர்கின்றன.
திருச்சி அடுத்த திருவெறும்பூர் அருகே உள்ள கிளியூர் கிராமம் கல்லணையிலிருந்து பிரியும் வெண்ணாற்றின் கரையில் உள்ளது. இங்குள்ள குளத்திற்கு வெளிநாட்டிலிருந்து ஆயிரக்கணக்கான பறவைகள் ஆண்டுதோறும் நவம்பர், டிசம்பர், ஜனவரி மாதங்களில் வலசை வருகின்றன. தற்போது வலசை வந்துள்ள பறவைகள் குளம் முழுவதும் பரவி அமர்ந்துள்ளது ஆச்சரியமளிக்கிறது.

பல ஆயிரம் கிலோ மீட்டர் தூரம், நாடு விட்டு நாடு பறந்து வந்து கிளியூர் வந்து செல்கின்றன. கிளியூருக்கு வலசை வந்துள்ள இந்த பறவைகள் ஐரோப்பா, மத்திய ஆசியா போன்ற நாடுகளிலிருந்து வந்துள்ளன. இதில் காட்டு வாத்து இனத்தை சேர்ந்த நீலச்சிறகி வாத்து , ஆண்டிவாத்து, ஊசிவால் வாத்து, சீழ்கை சிறவி, குள்ளதாரா வாத்து ஆகியவை குளத்தை அலங்கரித்து கொண்டிருக்கின்றன. ஆண்டுமுழுவதும் காணப்படும் நீர்காகங்கள், பாம்பு தாராக்கள், முக்குளிப்பான்கள் ஆகியவற்றுடன் ஆலாக்களும் சேர்ந்து மீன்வேட்டையாடுவது ஏரியின் வளமையை காட்டுகிறது. பொறி உள்ளான், தகைவிலான், கீச்சான் போன்ற உள்நாட்டிற்குள் வலசை செல்லும் பறவைகளும், மஞ்சள் மூக்கு நாரை, நத்தை குத்தி நாரை, அரிவாள் மூக்கன் போன்று குறைந்த தூரம் வலசை செல்லும் பறவைகளையும் இங்கு ஏராளமாக காணமுடிகிறது.

வலசை செல்வதற்கு சில வாரங்கள் முன் இந்த பறவைகள் நிறைய இரையை உட்கொண்டு, அதை கொழுப்பாக மாற்றி உடலில் சேமித்துக்கொண்டு இதை ஆற்றலாக மாற்றி நீண்ட தூரம் பறக்கின்றன. ஆர்டிக் ஆலா போன்ற பறவைகள் ஒரே முயற்சியில் செல்ல வேண்டிய 12 ஆயிரம் கி.மீ. தொலைவையும் கடக்க வல்லது. இதனால் பறவைகள் ஆண்டுதோறும் ஒரே பகுதிக்கு வலசை வருகின்றன. இதேபோல் கூட்டமாக வலசை வரும் வாத்துக்கள், நாரைகள் போன்ற நீர்ப்பறவைகளை பொறுத்தவரை கடந்த ஆண்டு வந்த திசை நோக்கி அவைகள் வந்து பார்க்கும். சூழல் சரியாக இருந்தால் அங்கேயே முகாமிடும். இல்லை என்றால் அடுத்த இடம் என 40 கி.மீ தொலைவுக்குள் வட்டமிடும். ஆனால், இமயமலை சாரலில் இருந்து, மேற்கு தொடர்ச்சி மலையின் உயர்ந்த சிகரங்களில் இருந்து குளிர் காலத்திற்கு தரை பகுதியை அடையும் பறவைகள், தேர்வு செய்யும் இடங்கள் முட்புதர் காடுகளும், மூங்கில் காடுகளாகும்.

இதுகுறித்து பறவை ஆர்வலர்கள் பாலா பாரதி, தங்கமணி ஆகியோர் கூறியதாவது: பறவைகள் தங்களது நலனுக்காக வலசை போனாலும் இவற்றால் மகரந்த சேர்க்கை, கழிவுகளால் மண்வளம் பெருகுதல், பூச்சிகளின் எண்ணிக்கை கட்டுப்படுதல், விதைகளை பரப்புதல் மூலம் தாவர வகைகள் பரவுதல் என பல்லுயிர் பெருக்கம் நிலைபெறுவதற்கு காரணமாக அமைகிறது என்றனர்.

The post திருச்சி அருகே ஒரு வேடந்தாங்கல்: ஆயிரக்கணக்கில் குவிந்துள்ள வெளிநாட்டு பறவைகள் appeared first on Dinakaran.

Tags : Vedanthangal ,Trichy ,
× RELATED திருச்சி ரயில் நிலையத்தில் நடனமாடி...